மீரட்
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அடிபணியும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடந்த டிராக்டர் பேரணியில் விஷமிகள் ஊடுருவலால் கடும் வன்முறை வெடித்தது.
அதையொட்டி டில்லி எல்லைகள் அடைக்கப்பட்டு அங்கு தங்கியிருந்த விவசாயிகளுக்கு காவல்துறையினர் கடும் இடைஞ்சல் விளைவித்ததாகத் தகவல்கள் வந்தன. ஆயினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். எனவே விவசாயிகள் போராட்டம் 100 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் மீரட் நகரில் நடந்த கிசான் மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கலந்து கொண்டுள்ளார்.
அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து தனது உரையில், “நம்பிக்கையை இழக்காதீர்கள். இப்போது 100 நாட்கள் ஆகி உள்ளது. அது 100 வாரங்கள் ஆனாலும் சரி 100 மாதங்கள் ஆனாலும் சரி மத்திய அரசு இந்த கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் நாம் நமது போரைத் தொடர்வோம்” என தெரிவித்துள்ளார்.