புதுடெல்லி:
பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதற்கான கவுன்ட்டவுன் சனிக்கிழமை காலை 8.54 மணிக்கு தொடங்கியது. அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா 637 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 4 ஆண்டுகள். இது பிரேஸிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வடிவமைக்கப்பட்டது.

இதுதவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூா் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூா் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் இந்த ஏவுதலில் இடம்பெற்றுள்ளன.  அதேபோன்று அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.