நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நடிகை கங்கனா ரணாவத், டி.வி. ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், இந்தி சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

கங்கனா தெரிவித்த கருத்து, தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், எனவே கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாவேத் அக்தர், மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜவேத் அக்தர் புகார் குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு ஜுகு போலீசாருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஜுகு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை அளித்தனர்.

“ஜாவேத் அக்தர் கொடுத்த புகார், நீதிமன்ற விசாரணைக்கு உரியது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, வழக்கு விசாரணைக்கு ஆஜாராகுமாறு கங்கனாவுக்கு, அந்தேரி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

– பா. பாரதி