மும்பை: இந்தியக் கேப்டன் விராத் கோலியை எப்படி கையாள்வது என்ற நுட்பத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை என்றுள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி.

அவர் கூறியுள்ளதாவது, “விராத் கோலி இப்போது சூப்பரான ஃபார்மில் இருக்கிறார். குழந்தை பிறந்துவிட்ட மகிழ்ச்சி, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகம் என பரபரப்பாக இருப்பார். கோலியை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் என எங்களுக்குத் தெரியவில்லை.

உண்மையில் கோலி ஒரு வியப்புக்குரிய வீரர் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவருடன் விளையாடும்போது சக வீரர்களை ஊக்கப்படுத்துவார்; அவரும் உற்சாகமாக விளையாடுவார்.

எனக்குத் தெரிந்து விராத் கோலி இந்திய ஆடுகளத்தில் பலவீனமாக பேட் செய்வார் என்று நினைக்கவில்லை. அவ்வாறு அவருக்கு எந்தப் பலவீனமும் இந்தியக் களத்தில் அவருக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதையெல்லாம் நினைக்கும்போது, விராத் கோலியை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை. விராத் கோலி சிறந்த மனிதர், எனக்கு நல்ல நண்பர். நாங்கள் கிரிக்கெட்டை பற்றி அதிகமாகப் பேசமாட்டோம், சிறிதளவே பேசுவோம்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எனக்கு ஊக்களிப்பதாக இருக்கும். என்னை தேர்ந்தெடுக்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படமாட்டேன். விளையாடத் தயாராக இருப்பேன், வாய்ப்புக் கிடைத்தால் சிறப்பாக விளையாடத் தயாராக இருப்பேன்.

இலங்கைக்கு சென்றபோது நான் கொரோனாவில் பாதிக்கப்பட்ட காலத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாடவில்லை. இருப்பினும் 6 வலைப்பயிற்சி செஷன்களில் தனிமைப்படுத்தி இருந்தபோது பங்கேற்றேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒப்பந்தம் முடிந்தபின், சிறிதுகாலம் ஓய்வெடுத்து, பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடினேன். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடமல் போனது வருத்தமாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது பந்துவீச்சு, பேட்டிங்கில் மெருகு ஏறும், இரு துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும். வெள்ளைப்பந்துகளில் விளையாடுவது சிறப்பானது என நான் நினைக்கவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்பு பந்தில் விளையாடும்போது, அதிகமான பந்துகளைப் பேட்ஸ்மேன்கள் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும், பல்வேறு ஷாட்களை ஆடிப் பழகலாம். பந்துவீசினாலும் அதிகமான ஓவர்களை வீச முடியும், பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடலாம். ஆனால், டி20 போட்டிகளில் சிக்ஸர், பவுண்டரி என ஒவ்வொரு பந்தையும் குறிவைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.