ஜெய்ப்பூர்: மக்கள் விரோத வேளாண் சட்ட மசோதா காரணமாக, புத்தாண்டின்போதும் விவசாயிகளை  மோடி அரசு  நடுரோட்டில் நிற்க வைத்துள்ளது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார்.  மத்திய பா.ஜ.க. அரசால் புத்தாண்டை சாலைகளில் வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர் என்று  குற்றம் சாட்டினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 35வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் நேற்று நடைபெற்ற 6வது கட்ட பேச்சுவார்த்தையில் 2 கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மீண்டும் ஜனவரி 4ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் விவசாயிகள் போராட்டம், பேச்சுவார்த்தை குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,   2020 முடிவடையவிருக்கும் நிலையில், நாம் புத்தாண்டுக்குள் நுழைகிறோம் என்பதால், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைக்கும் என முழு தேசமும் காத்திருந்தது.  ஏனென்றால்,  பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது எதிர்ப்பை கைவிட்டு விட்டு வீடுகளுக்கு சென்று தங்கள் குடும்பத்துடன் புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட முடியும். ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் இறங்கி வரவில்லை. ஜனவரி 4ம் தேதி மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக,  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எங்கள் உழவர் சகோதர மற்றும் சகோதரிகள் புத்தாண்டை சாலைகளிலும், வீடுகளுக்கு வெளியேயும் வரவேற்பார்கள் என்பது சோகமானது.பொறுப்பான அரசு இதை ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.