
புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து செயலாற்றுவதன் மூலமே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியடைய செய்ய இயலும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா.
அவர் பேசியுள்ளதாவது, “ஓர் இந்திய அரசு ஊழியரின் மகனாக வளர்ந்த நான், நம் பொதுத்துறை நிறுவனங்களின் நிறுவன வலிமை என்பது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்.
அவற்றை சிறந்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாகவும் திறமையான நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து சிந்திக்க வேண்டும்.
நவீனமயமாக்கலில், பொதுத்துறைக்கும் ஆதரவு அளிப்பது அவசியம் என கருதுகிறேன்.
பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து செயல்படுவதன் மூலமே, பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்ய முடியும்” என்றார் நாதெல்லா.