டெல்லி: டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 21ம் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிவர் புயலாக மாறி, கடந்த 25ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழக வட மாவட்டங்களில் மழையை தந்தது.

இந் நிலையில், டிசம்பர் 1 மற்றும்  2 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை தென் தமிழகத்தில் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்த 36 மணி நேரத்தில் இது காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக மாறும்.

பின்னர் மேலும் வலுப்பெற்று டிசம்பர் 2ம் தேதி தென் தமிழக கடல் பகுதிகளை நெருங்கும். அதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் கேரளாவில் அன்றைய தினம் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று  தெரிவித்துள்ளது.