புதுச்சேரி: மாநிலத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கு சாலை வரி தள்ளுபடி  செய்யப்படும் என  முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வாகனங்கள் இயக்கம் முடக்கப்பட்டது. இதனால், தனியார் பேருந்துகள் உள்பட அனைத்து வாடகை வாகனங்களும் பெரும் அவதியடைந்தன. ஆனால், பொதுமுடக்க காலத்தில் இயக்கப்படாத வாகனங்களுக்கு சாலைவரி செலுத்த வேண்டும் என மாநில அரசுகள் தெரிவித்தன. ஆனால், நீதிமன்றம் பொதுமுடக்க காலமான 6 மாதங்களுக்கு சாலை வரி விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு காலத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. வருமானம் இல்லாததால் சாலை வரியை தள்ளுபடி செய்யுமாறு பஸ் அதிபர்கள் மாநிலஅரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த  கோரிக்கையை ஆய்வு செய்த  முதல்வர் நாராயணசாமி, சாலை வரி நீக்க ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தார்.  இதை அடுத்து இன்றுமுதல் மாநிலத்தில் தனியார் பஸ்கள்  இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக  புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காய்கறி மார்க்கெட் மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கே மாற்றப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த  மார்க்கெட்டின் 13 வாயில்களிலும் கொரோனா தடுப்புப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.