நெல்லை: சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க கோரிய வழக்கில், நெல்லை ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சிவசங்கரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: கேரளாவின் மேனுவல் ஜார்ஜ் என்பவர், தங்கள் பகுதியில் எம் சாண்ட் குவாரி அமைக்க அனுமதி பெற்றுள்ளார்.
ஆனால் நாள்தோறும் இரவு நேரங்களில் 300 லாரிகள் வரை சட்டவிரோதமாக மண்ணை அள்ளி கடத்தி விற்பனை செய்து வருகிறார். அதன் காரணமாக, நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அதனை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று தெரிவித்தனர்.
மணல் கடத்தல் காவல்துறையினருக்கு தெரியாமல் நடப்பதில்லை என்ற நீதிபதிகள், வழக்கு குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். நெல்லை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]