தனது 98 வயதில் 98 மதிப்பெண் எடுத்த கேரளா மூதாட்டி கல்வி செயல்பாடுகளுக்கான காமன்வெல்த்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

kerala

கேரள அரசு மாநிலத்தில் உள்ள மக்களின் எழுத்தறிவு திறனை உயர்த்தும் பொருட்டு ‘அக்‌ஷரலஷம்’ என்ற கல்வி கற்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. படிப்பைத் தவறவிட்டவர்கள் மீண்டும் கல்வி கற்கும் வகையில் இத்திடம் செயல்படுத்தப்பட்டது. இதில் குடும்பச் சூழல் கருதி படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்ட முதியவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களில் ஆலப்புழாவைச் சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி அம்மா என்ற மூதாட்டி ‘அக்‌ஷரலக்ஷம்’ திட்டத்தின் மூலம் கல்வி பெற்று, அப்போது நடத்தப்பட்ட பொதுத்தேர்வை எதிர்கொண்டார். இதில் கார்த்தியாயினி அம்மா நூற்றுக்கு 98 மதிப்பெண் எடுத்து அசத்தினார். இதுமட்டுமின்றி, கணினி இயக்க வேண்டும் என கார்த்தியாயினி அம்மா விரும்பியதால் கேரளா கல்வித்துறை அமைச்சர் சி. ரவீந்திரநாத் அவருக்கு மடிக்கணினியை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் கார்த்தியாயினி அம்மாவை கௌரவிக்கும் விதமாக காமென்வெல்த் அமைப்பு, கல்விக்கான நல்லெண்ண தூதராக அவரை நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, காமென்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளில் தொலைதூர கல்வியை மேம்படுத்தும் வகையில் கார்த்தியாயினி அம்மா நல்லெண்ணத் தூதராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதிய வயதில் கல்வி கற்கும் கார்த்தியாயினி அம்மா இளம் வயதிலேயே கணவனை இழந்தார். அதன் பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த அவர் தனது 60வயது மகளிடம் இருந்து படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.