பைசரனில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

5 அல்லது 6 தீவிரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் அங்கு விரைந்துவந்த பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பஹல்காமில் இருந்து 200 கி.மீ. தூரமுள்ள பாகிஸ்தான் எல்லை வரை உள்ள அனைத்து முக்கிய வழித்தடங்களும் மூடப்பட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இதுவரை மொத்தம் ஒன்பது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா, புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஒரு பயங்கரவாத அமைப்பில் இணைந்த அட்னான் ஷாஃபியின் வீடு, ஷோபியன் மாவட்டத்தில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் தீவிர பயங்கரவாதி அமீர் நசீர் மற்றும் பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி ஜமீல் அகமது ஷெர்கோஜ்ரி ஆகியோரின் வீடுகள் இடிக்கப்பட்டன.

பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையை அடுத்து தீவிரவாதிகள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.