சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  அதைத்தொடர்ந்து, ஜுன் 24ந்தேதி  தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இடையிடையே பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளையும் இடம்மாற்றம் செய்துள்ளது.

இந்த நிலையில், இன்று  9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கலைஅரசி, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கமிஷனராக இருந்த சம்பத், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராகவும்,

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்த மகேஸ்வரி, நில நிர்வாகம்/நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குனராகவும் நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும்,

புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குனர் சரவணவேல்ராஜ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் மோகன், புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குராகவும்,

நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் இயக்குனர் சிவராசு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனராகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் செயலாளர் ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.