சென்னை: மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசின் பல்வேறு துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தொகுப்பூதியம் மற்றும் காண்டிராக்ட் ஊதியம் பெற்று வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 ஆக உள்ளது. இதனால் இளையதலைமுறையினருக்கு அரசு பணிகள் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 60 வயது பெறும் மாநில அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு, 8,144 பேர் ஓய்வு பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2025 மே 31ந்தேதி அன்று 60 வயது நிரம்பிய 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர். பொதுவாக, அரசு பணிகளில் உள்ளவர்கள், அவர்கள் பணியில் சேர்ந்த நாட்களை கணக்கிட்டு, 60 வயதில் ஓய்வு பெறுவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு மாதமும் பல ஊழியர்கள் ஓய்வு பெற்று வருவார்கள். ஆனால், பள்ளிகள் உள்பட சில பணிகளில், மாதங்களில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள். அதற்கு முக்கிய காரணம், மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு, அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது ஓய்வு பெறுவார்கள்.
அந்த அடிப்படையில் மே மாதம் 31-ந்தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகிறார்கள்.
இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் ஓய்வு பெறுவது இந்த மாதத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் (ஏப்ரல்) 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.