சென்னை :

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாயன்று நடந்த வெடித் தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 5000 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

2014 ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 2700 டன் எடைகொண்ட அம்மோனியம் நைட்ரேட் எனும் எளிதில் தீப்பற்ற கூடிய ரசாயன பொருள் வைக்கப்பட்டிருந்த துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தே குண்டுவெடிப்பு போன்ற இந்த நிகழ்விற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது விபத்தா, உள்நாட்டு தீவிரவாதிகள் அல்லது அண்டை நாட்டு சதியா என்று யூகிக்க முடியாத நிலையில், வெடி விபத்து நடந்த பெய்ரூட் துறைமுக பகுதியின் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்து கிட்டத்தட்ட 3,00,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இதேபோன்று ஆறு ஆண்டுகளுக்கு முன் கரூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வந்த அம்மோனியம் நைட்ரேட் எனும் ரசாயன பொருளை சுங்கத்துறையினர் கைப்பற்றி மணலியில் உள்ள கிடங்கில் வைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் வெளியானதும், தற்போது லெபனானில் ஏற்பட்டது போல் இங்கும் ஏற்பட்டுவிடுமோ என்று மாதவரத்தில் உள்ள ஒரு ரசாயன கிடங்கில் ஆறு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீவிபத்தை நேரடியாகப் பார்த்த வட சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அம்மோனியம் நைட்ரேட் எனும் இந்த ரசாயனம் உரம் தயாரிக்க பெரும்பாலும் பயன்படும் நிலையில், வெடிமருந்துகளை தயாரிக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். எளிதில் தீப்பற்ற கூடிய பொருள் என்ற போதிலும் இந்த பொருளின் மீது தீ பிடித்தால் மட்டுமே சேதம் ஏற்படும். இருந்த போதும் 750 டன் வரையிலான இந்த பொருள் பல வருடங்களாக இங்கு வைக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தவுடன், கைப்பற்றப்பட்ட இந்த பொருளை அரசு ஏன் தனது ராணுவ பயன்பாட்டிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ விற்காமல் வைத்துள்ளது என்றும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்றும் பொதுமக்கள் கேட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து கூறிய சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பொருள் வெடி பொருள் பாதுகாப்பு சட்டப்படி முறையான பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் இதை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.