டெல்லி: நாட்டில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 72,51,419 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 91,54,65,826 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,  இந்தியாவில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா புதிய அடையாளத்தை அடைந்துள்ளது. இந்தியாவை இதேபோன்று பாதுகாப்பாக வைத்திருப்போம். கொரோனாவுக்கு எதிராக போராடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வடகிழக்கு பகுதிகளுக்கு டிரோன் மூலம் தடுப்பூசி விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதை  தொடங்கி வைத்து மாண்டவியா கூறுகையில், ‘‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட டிரோன் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்வதற்கு பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.

மேலும், பிஷ்னுபுர் மாவட்ட மருத்துவமனையில் இருந்து 15கி.மீ. வான்வழி தொலைவில் இருக்கும் லோக்டாக் பகுதிக்கு 12 முதல் 15நிமிடத்தில் டிரோன்கள் தடுப்பூசிகளை  எடுத்து சென்றுள்ளதாகவும்,   டிரோன் மூலமாக விநியோகிக்கப்பட்ட கொரோனா தடுப்புமருந்தில் 10 பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோசும், 8  பேர் 2வது டோசும் பெற்றுள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.