இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற துப்பாக்கி சண்டையில்,  பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பள்ளத்தாக்கு பகுதிகளை பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள பிம்பர் பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்ததாக இந்திய ராணுவம் கூறுகிறது.

ஆனால், பாகிஸ்தானோ, . ஞாயிறுக்கிழமை இரவு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய படையினரின் அத்துமீறல்கள் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக,  பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்திய ராணுவத்தின் தன்னிச்சையான துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகளை  குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஊரியில் அமைந்துள்ள ஒரு ராணுவ முகாமில் தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
ஊரி தாக்குதல் சம்பவத்திலிருந்து, இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 26 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.