குருகிராம் உணவகத்தில் Mouth Freshnerக்கு பதில் ட்ரை ஐஸ் கொடுத்ததில் ஐந்து பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியை அடுத்த குருகிராம் செக்டர் 90ல் உள்ள உணவகம் ஒன்றில் நொய்டா-வைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது குடும்பத்துடன் இரவு உணவுக்கு சென்றார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு உணவருந்த சென்ற அவர் உணவருந்தி முடித்ததும் வாய் புத்துணர்ச்சிக்காக வழங்கப்பட்ட பாக்கெட்டை பிரித்து வாயில் கொட்டியதும் வாய் வெந்து போனதோடு வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

இவருடன் மொத்தம் ஆறு பேர் சென்ற நிலையில் 5 பேருக்கு இந்த நிலை ஏற்பட்டதை அடுத்து ஒருவர் மட்டும் அதை பயன்படுத்தவில்லை

உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற இவர்கள் உணவகத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டை மருத்துவரிடம் காட்டியதில் அது ஐஸ் கிரீம் போன்ற உணவுப் பொருட்களை உறை நிலையில் வைக்கக்கூடிய டிரை ஐஸ் என்பது தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய டிரை ஐஸ் வழங்கியது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மவுத் ப்ரெஷ்னருடன் டிரை ஐஸ் பாக்கெட் எப்படி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரை ஐஸ் சாப்பிட்டதில் உடல்நல குறைவு ஏற்பட்ட நான்கு பேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.