சென்னை

நாளைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை 3 ஆம் நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். எனவே இந்த வழக்கு 3-ஆம் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-ஆம் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.  இந்த வழக்கைக் கடந்த 7-ந்தேதி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பிலும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.  இன்றைய தினம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணை தொடங்கியது. வழக்கறிஞர் கபில்சிபல் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் காணொளி வாயிலாக ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

அமலாக்கத்துறைக்குக் காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் வழங்கியிருந்தாலும், புலன் விசாரணை அதிகாரம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்குத்தான் உள்ளது எனவும் குற்றம் புரிந்தவன் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைந்ததாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மேகலா தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

செந்தில் பாலாஜியைக் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாகக் கருதலாமா? என்பது குறித்து இரு தரப்பும் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.