புதுச்சேரி:
புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு தொற்று இருந்ததால் கிரண் பேடிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரியில் இன்று புதிதாக 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும், ராஜ்நிவாஸில் ஆளுநர் உட்பட 27 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.31)கூறியதாவது:

“புதுச்சேரி மாநிலத்தில் இன்று 3,118 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-19, காரைக்கால்-6, மாஹே-11 என மொத்தம் 36 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

மேலும், துணைநிலை ஆளுநரின் உதவியாளருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று ராஜ்நிவாஸில் உள்ள ஆளுநர் கிரண்பேடி உட்பட 27 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

இன்றைய தினம் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 633 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 166 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 218 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 384 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 115 (97.33 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 4 லட்சத்து 85 ஆயிரத்து 332 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 42 ஆயிரத்து 895 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது”.

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.