சென்னை: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என காவல்ஆணையர் அருண் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் இல்லம் உட்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதேபோல், நேற்றும் (நவம்பர் 11) நடிகர்கள் அஜித், எஸ்.வி. சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதுவும் புரளி எனத் தெரியவந்தது.
இதற்கிடையில், டெல்லியில் நவம்பர் 10 அன்று செங்கோட்டை பகுதியில், கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் மிரட்டல்களால் பதற்றம் நிலவும் நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் விடுக்கும் நபர்களைப் பிடிக்கச் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் அருண், சென்னைக்கு கடந்த ஏப்ரல் முதல் இப்போதுவரை 342 வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் வந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்துமே தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், Dark Web ப்ரவுசர்கள் மூலம் இந்த மெயில்கள் அனுப்பப்படுவதால் மர்ம நபர்களை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.