காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்துவரும், ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகையின்போது திடீரென குண்டு வெடித்ததில் 33 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி வருகின்றன.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  தொழுகையின்போது நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பில் 33 பேர் பலியாகி உள்ளனர். 43 பேர் காயமடைந்துள்ளனர் என்றும்  தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
 ‘இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் தீய சக்திகள். அவர்களைக் கைது செய்து தண்டிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்தார். இந்த மசூதி குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு நகரங்களான குண்டூஸ் மற்றும் மசார்-இ-ஷரீப் ஆகிய இடங்களில் நேற்று முன்நாளில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஒரு மசூதியிலும், சில நாட்களுக்கு முன்பு மேற்கு காபூலில் உள்ள பள்ளியிலும் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.