சென்னை: மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மண்டலங்களில் செயல்பட்டு வரும் கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாதவரம் ஜி.என்.டி சாலை மற்றும் சந்திரபிரபு காலனி சந்திப்பில் 900 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி, 23-ம் தேதி இரவு 10 மணி முதல் 24-ம் தேதி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. எனவே, மாதவரம் மண்டலத்தில் கடப்பா சாலை, மதனகுப்பம், ராஜீவ் காந்தி நகர், தாங்கல் கரை, புத்தகரம், பத்மாவதி, வீனஸ் நகர் உள்ளிட்ட உந்து நிலையங்கள் செயல்படாது.

இதேபோல், திரு.வி.க.நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம் செக்டார் ஏ, கொளத்தூர் கழிவுநீர் உந்து நிலையங்களும், அம்பத்தூர் மண்டலத்தில் கொரட்டூர், லெனின், சங்கம், அயப்பாக்கம், வி.ஓ.சி நகர், நேரு நகர், கள்ளிக்குப்பம், கருப்பன் குளம், கருக்கு, பள்ளம், சிட்கோ, கச்சனகுப்பம், கிழக்கு அவென்யூ, இளங்கோ நகர் உந்து நிலையங்களும் 2 நாட்கள் செயல்படாது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.