கடலூர் : கடலூர் மாவட்டத்தில்,  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரித்துகொல்லப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்குமார் (40). இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை அவரது வீடு திறக்கப்படாத நிலையில், அருகே இருந்தவர்கள் வீட்டின் கதவை தட்டி பார்த்தும் அவர்கள் திறக்காதநிலையில், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நெல்லிக்குப்பம்  காவல்துறையினர் வந்து கதவை திறந்த பார்த்தபோது, அங்குள்ள அறைகளில் அவர்கள் எரிந்து கிடந்தது தெரிய வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து, இறந்து கிடந்தவர்கள், சுதன் குமார், அவரது தாயார் கமலேஸ்வரி (65) மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய மூவரும் என தெரிய வந்தது. அவர்கள்  கொலை செய்யப்பட்டு, ஒவ்வொரு அறையில் ஒருவர் என  தனித்தனியாக வைத்து தீ வைத்து கொளுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

 இது தொடர்பாக அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.