காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் சிலர் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வரும் நிலையில், மூவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டிருந்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். தற்போது கடந்த 1ம் தேதி பெருமாளை வெளியே எடுத்து, 48 நாட்களுக்கு அவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு குவிந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.