
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாற்று அரசியல் பாதை விளக்க மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது,
’’பெரியாரின் கோட்பாடுகளை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கைவிட்டு விட்டன. தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்து விட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 81 சாதி ஆணவ கொலைகள் நடந்துள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டும்’’என்று தெரிவித்தார்.
மேலும், ‘’தற்போதைய ஆட்சியில் லஞ்சம் வாங்கி கொண்டு தான் அரசு பணியில் ஆட்களை சேர்க்கிறார்கள். மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலை தடுக்க ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வந்து, ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
தமிழகத்தில் கல்வி வணிக மயமாகி விட்டது. இதனை மாற்றி அமைப்போம். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். மதுபானம் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். எங்களது கூட்டணியில் 4–வது கட்ட பிரச்சாரம் முடியும் நிலையில் உள்ளது. 5–வது கட்ட பிரச்சாரம் தென் மாவட்டங்களில் நடைபெற உள்ளது’’என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel