விஜயவாடா: ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது.

2ம் கட்ட ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பலரும்  பொழுது போக்க பல செயல்களில் இறங்கி உள்ளனர். சிலர் குடும்பத்தினருடன் பயனுள்ள செயல்களை செய்து மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால், வேறு சிலரோ சமூக இடைவெளியை பின்பற்றாமல் நண்பர்களுடன் விளையாடி கொரோனா அச்சுறுத்தலை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா பரவியது.

இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் கூறி உள்ளதாவது: கிருஷ்ணா லங்கா பகுதியில் டிரக் டிரைவர் ஒருவர் பொழுது போக நண்பர்களுடன் சீட்டு விளையாடி உள்ளார். அதன் அருகே பெண்களும் குழுவாக தாயம் விளையாடியுள்ளனர்.

அந்த டிரைவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கும் கொரோனா பரவியுள்ளது. இதே போல, கர்மிகா நகரிலும் சீட்டு விளையாடிய டிரக் டிரைவர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது.

அதனால், 2 நாட்களில் நகரில் சுமார் 40 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது தான் அனைத்துக்கும் காரணம் என்று கூறினார்.