சென்னை: நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த முதல்வர் உத்தரவிட்ட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். மேலும், உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில், அதை ஆய்வு செய்த அமைச்சர் கோவி செழியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் உயர்கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.
இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாண வர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.