டில்லி

ரும் 15 ஆம் தேதிக்குள் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தற்போது தேர்தல் ஆணையத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த மாதம் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையராக இருந்த அனூப் சந்திர பாண்டே, ஓய்வு பெற்றார்.  கடந்த வெள்ளிக்கிழமை மற்றொரு தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்தார்.

வரும் 2027 டிசம்பர் 5 வரை அருண் கோயல் பதவிக்காலம், உள்ளதால் அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி உயர்வு பெற இருந்தார். ஆனால் அதற்குள் ராஜினாமா செய்து விட்டதால் தற்போது தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே உள்ளார் 2 தேர்தல் ஆணையர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் நேரத்தில் 2 காலியிடங்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஆக்கின.  எனவே மார்ச் 15 ஆம் தேதிக்குள் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்,

”புதிதாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டப்படி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான குழு, 2 காலியிடங்களுக்கு தலா 5 அதிகாரிகள் கொண்ட 2 உத்தேச பட்டியலை தயாரிக்கும். 

அந்த பட்டியலைப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கும். தேர்வுக்குழு, வருகிற 13 அல்லது 14-ந் தேதி தனது வசதிக்கேற்ப கூடும். 

குழு உத்தேச பட்டியலில் இருந்து 2 புதிய தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும். அவர்களைக் குடியரசுத் தலைவர் வரும் 15 ஆம் தேதிக்குள் நியமிப்பார்.” 

என்று செய்திகள் மூலம் தெரிய வந்துள்ளது.