டில்லி

நைஜீரியாவில் கடல் கொள்ளையர்கள் பிடித்த 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

விஎல்சிசி, நேவ் கான்ஸ்டிலேஷன் என்ற  கப்பல் ஹாங்காங் கொடியுடன் நைஜீரிய கடற்பகுதியைக் கடக்கும்போது கடந்த 3 ஆம் தேதி  கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் பணியாற்றி வந்தனர். கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தைச் சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ். வெளியிட்ட தகவல், நைஜீரிய நாட்டில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்குக் கிடைத்தது.

இதையொட்டி நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தனர்.   நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது கடத்தப்பட்ட கப்பல், நைஜீரிய கடற்படை கண்காணிப்பில், பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மத்திய அரசு கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கம் அளித்தது. நைஜீரிய கடல் பகுதியில் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 18 பேரை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா முடிவு செய்தது.  இதைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசைத் தொடர்பு கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்தது.

நைஜீரிய நாட்டில்  உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட இந்தியர்களை  மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகம் கடத்தப்பட்ட 18 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நைஜீரியாவின் கடற்படை மற்றும் கப்பல் நிறுவனம், பிணையக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டு இருந்த  18 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.   அத்துடன் அந்த பதிவில் இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்க உதவிக்கரமாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.