சென்னை: தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17நாள் பயணமாக முதலமைச்சர  மு.க.ஸ்டாலின் நாளை மாலை அமெரிக்கா புறப்படுகிறார். அவருடன் மனைவி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினரும்  அமெரிக்க செல்கின்றனர்.

அமெரிக்க செல்லும் முலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க,   அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆலோசனை நடத்தி, பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழ்நாட்டை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்,  இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே ஜனவரியில் உலக தமிழ் முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய நிலையில், இந்த மாதமும் தொழில் முனைவோர் மாநாட்டை கூட்டி, பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க  நாளை (27ந்தேதி)  இரவு  முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை இரவு 10 மணி அளவில்  விமானம் புறப்படுகிறது. இந்த விமானம்  28-ந்தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைகிறது.   அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 29-ந்தேதி சான்பிரான்சிஸ் கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

பின்னர்,  31-ந்தேதி சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதைத்தொடர்ந்து,  புலம் பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

அமெரிக்காவில் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சுமார் 30 இடங்களுக்கு சென்று முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது

 சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் வகையில், முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு நடத்த உள்ளார். உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்ட இந்த பயணத்தில், முதல்வர் ஸ்டாலின்   அங்கு செப். 2 ம் தேதி வரை தங்கியிருந்து முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார்.

அதன்பின், செப். 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுகிறார். அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார்.

இதற்கிடையில் செப். 7ம் தேதி அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

இந்த பயணத்தின்போது,  அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் 14-ந்தேதி (செப்டம்பர்) சென்னை திரும்புவார் என தெரிகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்வதை யொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்று விட்டார். சிகாகோவில் அமெரிக்க தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி அது குறித்து சிகாகோவில் அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல் அங்கு நடைபெற உள்ள மற்ற நிகழ்ச்சிகள் குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏற்னவே முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ரூ.2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. இந்த மாநாடு மூலம் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டது.

4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ந்தேதி (ஆகஸ்டு 2024) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,7,616 கோடி முதலீட்டில் 64,968 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.