சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 142 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  அரசின் முயற்சிகளில் ஏதேனும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.. ஏதேனும் ஒரு வகையில் அரசின் முயற்சியில் பங்கேற்று உதவ வேண்டும்” எனத் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தொழில் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்  பேசியதாவது:

“பல்வேறு தொழில் நிறுவனங்கள் சிப்காட் மூலம் சுமார் 7,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டுள்ளன. சிப்காட் நிறுவனம் இதுவரை 500 சிலிண்டர்களை சிங்கப்பூரிலிருந்து கொண்டுவந்துள்ளது. மேலும் 1,650 சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பல் மூலம் வர உள்ளன. சிஐஏ, சாம்சங் நிறுவனம் மூலம் 500 சிலிண்டர்கள் நம் மாநிலத்திற்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நமது மாநிலத்திவ்ல தொழில் நிறுவனத்தின் மூலம் 13 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்தியஅரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து 142 மினி ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. சிக்கலான இக்காலகட்டத்தில் அரசோடு தோள்கொடுத்து நிற்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீண்டெழ உங்கள் பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  அரசின் முயற்சிகளில் ஏதேனும் ஒன்றில் உங்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சிஎஸ்ஆர் முன்னெடுப்புகளில் இதற்கு முன்னுரிமை கொடுப்பது சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

குறிப்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் ஃப்லோ மீட்டர்கள், கிரியோஜெனிக் டெண்ட்ரஸ் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இவை தவிர முதல்வர் பொது நிவாரண நிதிக்கும் தாராளமாக நிதி வழங்க நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போது முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதி முழுவதையும் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், என்.என்.எம்.எஸ்.சி, சிப்காட், பெருநகர மாநகராட்சி ஆகியவை மேற்கொள்ளும் கொள்முதலுக்காக நீங்கள் நேரடியாக அந்தந்த விற்பனையாளர்களுக்கு நீங்கள் செலுத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது ஒவ்வொருவர் பங்களிப்பும் பல உயிர்களைக் காக்கவும், இந்த நோயிலிருந்து மக்களைக் காக்கவும் பேருதவியாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, உங்களின் பங்களிப்புக்கு முன்னதாக நான் நன்றி செலுத்துகிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.