அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் 3880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் கோயில் அமைந்துள்ளது.

அமர்நாத் குகை கோயிலுக்கு பால்டால் மற்றும் நுன்வான் அடிவார முகாம்களில் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பக்தர்களுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ மற்றும் உணவு சார்ந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் அமர்நாத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளது.

இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 44-ல் நச்லானா என்ற இடத்தில் இது நடந்துள்ளது.

40 பயணிகளுடன் பேருந்து அமர்நாத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேருந்தின் பிரேக் செயலிழந்ததை அடுத்து ஓட்டுநரால் அதை நிறுத்த முடியவில்லை.

இதனால் அச்சமடைந்த பயணிகளில் சிலர் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே குதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து துரிதமாக செயல்பட்டு பேருந்தின் சக்கரத்தில் கற்களை வைத்து அதன் வேகத்தை குறைத்து பின்னர் நிறுத்தியுள்ளனர்.

இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்து குதித்த மூன்று பெண்கள், ஒரு குழந்தை உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் இதனை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.