belgiyam
பெல்ஜியம் தலைநகர் புருஸெல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் அதிக சத்தத்துடன் வெடித்தது.
பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55 பேர் படுகாயமடைந்தனர்.
14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக புருசெல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பியர் மெய்ஸ் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. விமான நிலையத்தில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக, 129 பேரை பலிகொண்ட பாரிஸ் தாக்குதலையும் ஐ.எஸ் அமைப்பு தான் நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.