
பாஜக தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் முரளிதரராவ் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வழிபாடு நடத்த வந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் முரளிதரராவ், கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மதுவிலக்கு குறித்து பேசுவதற்குத் தகுதியற்றவை. அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் மதுபான ஆலை முதலாளிகளாக உள்ளனர். அதன் மூலம் வரும் பணத்தை வாக்காளர்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். பாஜகவின் தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும். தமிழகத்தின் முன்னேற்றம் சார்ந்த தேர்தல் அறிக்கையாக அது இருக்கும்.
234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். பாஜகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் விரும்பினால், பாஜக சின்னத்தில் போட்டியிடலாம். இல்லை என்றால் அவர்கள் கட்சிக்கு உரிய சின்னத்தில் போட்டியிடலாம் என்றார். பேட்டியின் போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Patrikai.com official YouTube Channel