ங்காஷைர், இங்கிலாந்து

ங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நுரையீரலில் கட்டி என முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்ததில் அது ஒரு பொம்மை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இங்கிலாந்தில் லங்காஷைர் பகுதியில் உள்ளது ராயல் பிரஸ்டோன் மருத்துவமனை.   இந்தப் பகுதியில் புகழ்பெற்ற மருத்துவமனையான ராயல் பிரஸ்டோன் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் முகமது முன்வர்.  இவர் இங்கு நுரையீரல் சிகிச்சை பிரிவில் முதன்மை மருத்துவராக பணி புரிகிறார்.  அவர் தன்னிடம் வந்த ஒரு நோயாளியின் விசித்திரமான நோய் பற்றி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது.

நோயாளியின் எக்ஸ் ரே

”எங்கள் மருத்துவமனைக்கு ஆண் நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்தார்.  சுமார் 50 வயதான அவர் தனக்கு சிறு வயதில் இருந்தே அடிக்கடி இருமல் வந்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.  சோதித்ததில் சாதாராண இருமல் போல தெரியாததால்,  நாங்கள் அவரை எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் அவர் நுரையீரலில்  வலது பக்கத்தில்கட்டி ஒன்று இருப்பது போல் தோற்றம் இருந்தது.

அதை கரைக்க சிகிச்சைகள் மேற்கொண்டும் நடக்காததால்,  அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தோம்.  அறுவை சிகிச்சை நடந்த போது தான் அது கட்டி அல்ல சிறு குழந்தைகள் விளையாடும் கூம்பு போன்ற ஒரு பொம்மை என்பது தெரிய வந்தது.   அதை நாங்கள் வெளியே எடுத்து விட்டோம்.   தற்போது அந்த நோயாளிக்கு இருமல் முழுவதுமாக நின்று விட்டது.

எடுக்கப்பட்ட பொம்மை

பிறகு அவரிடம் விசாரித்ததில், சிறு வயதில் அவர் சிறு சிறு விளையாட்டு சாதனங்களை வாயில் போட்டு விளையாடி உள்ளதாக தெரிய வந்துள்ளது.    தனது ஏழாம் வயதில் இதே போன்ற ஒரு பொம்மையை அவர் வாயில் போட்டுக் கொண்ட போது விழுங்கி விட்டதாகவும்,   வீட்டில் பெரியோர்கள் அடிப்பார்கள் என்பதாலும் மறைத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்.   பல நாட்களாக எந்த ஒரு உடல்நலக் குறைவும் ஏற்படாததால் அவர் இதை முழுதுமாக மறந்து விட்டார்.

அது தரமான பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏதும் ஏற்படவில்லை.   அவ்வப்போது லேசான இருமல் மட்டும் இருந்திருக்கிறது.   அவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததால் அதனால் இருமல் வந்துள்ளது என நினைத்து விட்டு விட்டார்.   தற்போது இருமல் நிற்காமல் தொடரவே அவர் சிகிச்சைக்கு வந்துள்ளார்.

மருத்துவர்கள்,  “இது போல குழந்தைகள் விழுங்கும் பொருட்கள் பல நேரங்களில் வயிற்றுனுள் சென்று விடுவதால் அவைகள் மலத்துடனோ,  அல்லது வாந்தி வந்தோ வெளியேற்றப்படுகிறது.    ஆனால் மூச்சுக் குழலின் உள் செல்லும் போது அது உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புக்கள் உள்ளது.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இது போன்ற சிறு சிறு விளையாட்டுப் பொருட்களை கொடுப்பதை அடியோடு தவிர்க்க வேண்டும்” என கூறி உள்ளனர்.