நம்மைப் பொருத்தவரை ஒரு உயிரினம் வாழ ஐம்பூதங்கள் வேண்டும். பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம். இந்த ஐந்தும் நமக்கு மிகச் சௌகரியமான நிலையில் இருப்பதாலேயே நம்மால் இந்த பூமியில் வாழ முடிகிறது.

மற்றொரு சூரியக் குடும்பம் இதே போல் இருக்க வேண்டுமானால் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. நடுவில் ஒரு நட்சத்திரம் தனக்கேயுள்ள ஈர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டும்.

2. அதைச் சுற்றி கிரகமும் தனக்கேயுரிய ஈர்ப்பு சக்தியுடன் அந்த நட்சத்திரத்தையும் வலம் வர வேண்டும்.

3. கிரகத்தில் நீர் இருந்தாக வேண்டும்.

4, காற்று மண்டலமும், காற்றழுத்தமும் சீராக இருக்க வேண்டும்.

5. பாறைகளின்/மணலின் மூலக்கூறுகள் உயிர் வாழ ஏற்றதாக இருக்க வேண்டும்.

6. உயிர்களின் பரிணாம வளர்ச்சி வேண்டும்.

7. அது சுற்றி வரும் நட்சத்திரம் சரியான தொலைவில் இருக்க வேண்டும். அதிக தொலைவில் இருந்தால் பனி அதிகமிருக்கும். பக்கத்தில் இருந்தால் வெப்பத்தில் உயிர்கள் பொசுங்கி விடும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதனால் இன்னொரு பூமியும், அதில் உயிரினங்கள் இருப்பதற்கும் வாய்ப்பே இல்லை என்று அடித்துக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். இல்லையில்லை, நம் எப்படி இருக்கிறோமோ அதே போல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இன்னும் சிலரோ, இந்த ஐம்பூதங்கள் இல்லாமல் வாழும் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பும் இருக்கும் அல்லவா என்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், நமது சூரியக் குடும்பம் போலவே இருக்கும் பல குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே எதிலாவது நம்மைப்போன்ற உயிரினங்கள் வாழ வழியுண்டு.

இரத்தினகிரி சுப்பையா