டில்லி
அடுத்த டெஸ்டில் சொந்தக் காரணங்களுக்காக ஓய்வு தேவை என புவனேஸ்வர், ஷிகர் தவான் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று முடிந்த இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் ஷிகர் தவான் அபாரமாக விளையாடினார்கள். புவனேஸ்வர் குமார் டெஸ்ட் தொடரில் இன்னிங்க்குக்கு 4 விக்கட்டுகள் என 8 விக்கட்டுகள் வீழ்த்தி உள்ளார். அதே போல தவான் இரண்டாவது இன்னிங்கிஸில் 116 பந்துகளில் 94 ரன்கள் எடுத்துள்ளார். தவான் சதம் அடித்திருந்தால் அது அவருடைய டெஸ்ட் போட்டிகளின் ஏழாவது சதமாக இருந்திருக்கும்.
தற்போது அவர்கள் இருவரும் சொந்தக் காரணங்களுக்காக அடுத்த டெஸ்டில் ஓய்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கட் வாரியம் அவர்களை இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவித்துள்ளது. தவான் மூன்றாவது போட்டியில் இருந்து விளையாடுவார் என வாரியம் அறிவித்துள்ளது.
புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய்சங்கர் 26 வயது இளைஞர். 2014-15 நடந்த ரஞ்சி டிராபி போட்டிகளில் தனது திறமையைக் காட்டி உள்ளார். வலதுகை ஆட்டக்காரரான இவர் 2014 வரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும், பிறகு ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்.