pongal_2694605f
ரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .
பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .
எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .
வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .
ஆசிரியர் அவனை கவனித்தார் .
” என்னப்பா … இப்படி உக்கார்ந்திருக்கே … படிப்பில் கவனமில்லையா …?
” ஐயா … என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !”
“அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?”
” ஒரு பசுமாடு இருக்கு ! ”
“என்னப்பா சொல்றே”
“ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .   என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு!”
ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,
“தம்பி ! ஒண்ணு செய்.    நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற … நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு … அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை … பிறகு வா …!”
” சரி .. சார் …!” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .
ஆசிரியர் நினைத்து கொண்டார்:
” ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் ”
ஒரு வாரம் கழிந்தது .
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .
அவர் அவனிடம்
” என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே?”
அவன் இல்லை என தலை ஆட்டினான் .
“அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?”
அவன் சொன்னான் ” சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது “.
ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .
ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .
நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .
விவேகானந்தர் கூட சொல்லுவர்
” நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் ” என்று .