irom sharmila
சமூக ஆர்வலர் ஐரோம் சர்மிளா( வயது 42), மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். சாப்பிட மறுத்து வரும் அவர் உயிர் வாழ்வதற்காக மூக்கு வழியாக குழாய் செலுத்தப்பட்டு அதன் மூலமே கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கைக்காக கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தினார். அப்போது அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது நேரில் ஆஜரான சர்மிளா, மணிப்பூரில் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்தால், தனது உண்ணாவிரதத்தை கைவிட தயாராக இருப்பதாக கூறினார். மேலும் தனது உயிரை மிகவும் நேசிப்பதாக கூறிய அவர், தனது நோக்கம் நிறைவேறுவதற்காகவே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இரு தரப்பும் வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பளித்த நீதிபதி ஹர்விந்தர் சிங், ஐரோம் சர்மிளாவை விடுதலை செய்தார்.