
நியூயார்க்:
கனடா மற்றும் அமெரிக்க நாட்டின் எல்லை பகுதியில் நான்கு ஏரிகளால் சூழப்பட்ட மிச்சிகன் பகுதி உள்ளது. இங்கு _ஃப்ளின்ட் என்ற ஊரில் மாசடைந்த குடி நீர் விநியோகிக்கப்பட்டதால், அதை அருந்திய பலர் உடல் நல பாதிப்பு அடைந்தனர். இதனால் பெரும் எதிர்ப்பு ஏற்படவே அந்த பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார் அதிபர் ஒபாமா.
. கடந்த 2014ஆம் ஆண்டு, மிச்சிகன் ஃபிளின்ட் பகுதியில் புதிய குடி நீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. தரமற்ற குழாய் பதிக்கப்பட்டதால், விரைவிலேயே துருபிடித்தது. இந்த குழாய்களில் வந்த குடிநீரில் லேசாக துர்நாற்றம் வீசியது. குடிநீரின் நிறமும் மாறுபட்டு இருந்தது. இந்த குடி நீரை அருந்திய பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மருத்துவர்கள் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பிறகு, “மாசடைந்த நீரை தொடர்ந்து பருகி வந்ததால் குழந்தைகளின் ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், குழந்தைகளின் சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டார்கள். இதனையடுத்து அந்த பகுதியில் அவசர நிலையை அறிவித்தார் அதிபர் ஒபாமா. தற்போது, அப்பகுதி மக்களுக்கு, அடுத்த 90 நாட்களுக்குத் தேவையான நல்ல நீர் வழங்கப்பட்டு வருகிறது.
Patrikai.com official YouTube Channel