karu
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அல்லவா? அவரைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிவிட்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணா பற்றிய தற்போதைய நினைவலைகளை பகிர்ந்திருந்தார். அதோடு, அண்ணா மறைந்த நேரத்தில் தா் ஆற்றிய உரையையும் பகிர்ந்திருந்தார்.  மனம் கனத்தது.
அதோடு மது விலக்கு பற்றி அண்ணா கொண்டிருந்த கருத்துக்களும் நினைவுக்கு வந்தன. (எப்போதோ படித்தது.)
காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கிறது. அண்ணா முதல்வராகிறார்.   மாநிலத்தின் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. உடனே சில அதிகாரிகள், “மதுவிலக்கை ரத்து செய்து, மதுக்கடைகளை திறப்போம்.   அரசுக்கு வருமானம் கிடைக்கும்” என்று ஆலோசனை சொல்கிறார்கள்.
சட்டென சொல்கிறார் அண்ணா:  “அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்காக வீட்டை கொழுத்துவதற்கு ஒப்பானது!”
இன்னொரு உதாரணமும் அண்ணா சொன்னார்: ““மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்”

ராமண்ணா
ராமண்ணா

இன்னொரு “புத்திசாலி” அதிகாரி, முதல்வர் அண்ணாவிடம்,  “மதுவிலக்கால் மக்களிடம் பணம் புழங்கும்” என்றார்.
விரக்தி சிரிப்பை உதிர்த்த அண்ணா,” மதுவிலக்கை நீக்குவதால் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது சரியல்ல. மக்கள் இப்போது, உணவு, உடை, போக்குவரத்துக்கு செய்துவரும் பணத்தில் இருந்துதானே மதுவை வாங்குவார்கள். இது எந்த விதத்தில் அவர்களுக்கு நலம் பயக்கும்?” என்று  எதிர்க்கேள்வி கேட்டார்.
அது மட்டுமா, “மதுவிலக்கு இல்லாவிட்டால், நிலைகுலைந்து தள்ளாடும் நபர்களை பார்க்க நேரிடும். இப்போது அது இல்லை. இந்த நிலையை நான் வரவேற்கிறேன்.
இன்று எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்” என்றார்.
“சுற்றியுள்ள மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை. ஆகவே தமிழகத்தில் மதுவிலக்கை  அமல்படுத்த முடியாது” என்று சட்டசபையிலேயே சொன்னார் தற்போதைய “மதுவிலக்கு”துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.  முதல்வர் ஜெயலலிதாவின் குரலாகத்தான் அவர் பேசினார்.
அண்ணா  முதல்வராக இருந்தபோதும் இது போன்ற குரல்கள் ஒலிக்கவே செய்தன. அதற்கு அண்ணா, “தமிழக அரசு மதுவிலக்கு திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது. ஆனால் நம்மைச் சுற்றி உள்ள அண்டை மாநிலங்கள் மதுவிலக்கை தளர்த்தி இருக்கின்றன.
இது நேர்மைக்கு தண்டனையும்,  நேர்மையின்மைக்கு பரிசும் அளிக்கப்படுவது போல் இருக்கிறது.  ஆனாலும் மதுவிலக்கை ரத்து செய்ய முடியாது” என்றார் உறுதியாக.
அதோடு, “இந்த நிலைக்குக் காரணம் மத்திய அரசுதான்.   மதுவிலக்கு காந்தீய கொள்கை. மதுவிலக்கைத் தவிர நம் நாட்டுக்கு தேசீய நெறிமுறை வேறு ஏது? அதைக்கூட ஒழுங்காக நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டது.
எது எதற்கோ தேசீய அடிப்படையில் கொள்கை வகுக்க மத்திய அரசு முன் வருகிறது. கல்வித்திட்டத்தில் கூட தேசீய கல்வித்திட்டம் என்று திட்டம் வகுக்கின்றனர். ஆனால் மதுவிலக்குக் கொள்கை நாடு முழுதும் ஒரே சீரானதாக இருக்க திட்டம் வகுக்க மத்திய அரசால் இயலவில்லை” என்றார்.
இந்த கருத்து இன்றும் பொருந்துகிறது.
“மேலை நாடுகளில் எல்லாம் மதுவிலக்கு இல்லையே” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அங்கே அளவு தெரிஞ்சி குடிக்கிறாங்க. நம்ம ஆளுங்களுக்கு அளவு தெரியாது. குடிச்சி சீரழிவான்” என்றார்.
என்ன ஒரு தீர்க்க தரிசனம்! தமிழர் மீது எவ்வளவு அக்கறை!
ஆனால் அண்ணா படத்தை கொடியில் வைத்துக்கொண்டே, “மதுவிலக்கு என்பது முடியவே முடியாது. கூடவே கூடாது” என்கிறது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
ஆனால்,  இதே கருத்தை சொல்லிக்கொண்டிருந்த  தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபமாய் மாறியிருக்கிறார்..
மதுவிலக்குக்கு ஆதரவாக தற்போது பேசி வருகிறார் கருணாநிதி. தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், முழுமையான மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று சொல்லிவருகிறார்.
முதலில், தனது கட்சிக்காரர்கள் அவர்கள் குடும்பத்தினர் பெயரில் நடத்தும் மது ஆலைகளை மூடச் சொல்லட்டும். அல்லது அவர்களை கட்சியைவிட்டு வெளியேற்றட்டும்.
அண்ணாவின் நினைவு நாளான இன்று, செய்வாரா கருணாநிதி?
அப்படிச் செய்யாதால்தான் உண்மையில் அண்ணாவின் மதுவிலக்கு கொள்கையில் கருணாநிதி, நிஜமான உறுதியோடு இருக்கிறார் என்று  அர்த்தமாகும்.