facebook_300x214_270x193

மதுரை:

மெக்கா மசூதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்தார்கள். இந்த விபத்துக்காக மகிழ்வதாக முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுளளார்.

சமீபத்தில் சவுதி நாட்டில் உள்ள மெக்கா மசூதியில் கிரேன் விழுந்து பெரும விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தார்கள்.  மேலும் பல நூறு பேர் காயம் அடைந்தார்கள்.

இந்த விபத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மரணமடைந்தது குறித்து மகிழ்வதாக, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி வேல்முருகன் தனது  பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவரது பதிவை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம் பேஸ்புக் பயனாளிகள் பார்த்து, அந்த தகவலை, திருமங்கலத்திலுள்ள முஸ்லிம்களுக்கு தகவல் கூறினர்.

இதையடுத்து  திருமங்கலத்தை சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர், பேஸ்புக் பதிவு குறித்து காவல்துறையில்  புகார் அளித்தார். இதையடுத்து வேல்முருகன் மீது  153ஏ, 295ஏ, 505(1) (c) மற்றும் 505 (2) உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.

விசாரணையின்போது வேல்முருகன் தகவல் தொழில்நுட்ப பாடத்தில் இளநிலை பட்டம் பயின்றவர் என்பதும், திருமங்கலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருபவர் என்பதும் தெரியவந்தது.

தற்போது சர்ச்சைக்குறிய அந்த பேஸ்புக் கருத்து அவரது பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவர் முஸ்லிம்கள் பற்றி சர்ச்சைக்குறிய பதிவுகளை எழுதி வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒன்று, “ மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மட்டுமே இந்தியாவை நேசித்த முஸ்லிம்” என்பதும் ஒன்று.

வேல்முருகன் தற்போது, தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார்.