Radha-Ravi09_05

ராதாரவியின் பேச்சு எப்போதுமே ஓவர் டோஸ்தான். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போது, கணக்கு கேட்ட விஷாலை அவர் மிக மோசமான வார்த்தைகளால் தாக்கிப்பேச, வெகுண்ட விஷால் தனி அணி அமைத்து தேர்தலில் வென்றார்.

“ஹூம்.. பல வருசங்களா நடிகர் சங்கத்தை தன் கட்டுப்பாட்டில வச்சிருந்தார்.. பாவம் மனுசன்” என்று தோற்ற ராதாரவியை பார்த்து பலரும் வருத்தப்பட்டார்கள் அல்லது கிண்டல் செய்தார்கள்.

தவிர, விஷால் அணி வென்றதால், புதிய படம் எதிலும் ராதாரவியை ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வடிவேலுக்கு ஏற்பட்ட நிலைதான் ராதாரவிக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராதாரவி இருக்கும் நிலையில்தான், தான் நடிக்கும் மருது படத்தில் ராதாரவியை ஒப்பந்தம் செய்யச் சொன்னார் விஷால்.

இதையடுத்து மருது பட இயக்குநர் முத்தையா ராதாரவியிடம் தகவலை சொன்னார். நல்ல சம்பளம் என்பதும் ராதாரவியை உற்சாகப்படுத்தியது.

ஆனால் வழக்கம் போல தன் நாக்காலேயே கெட்டிருக்கிறார் ராதாரவி. சமீபத்தில் தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ராதாரவி. அப்போது சம்பந்தமே இல்லாமல், “ விஷால்கூட நடிக்கிறீங்களானு என் கிட்ட வந்து கேட்டாங்க.. நான் நல்லா நடிப்பேன்.. அங்க போயி கேளுன்னு அனுப்பி வச்சேன்” என்று கிண்டலாக பேசினார். இது தீபாவளி அன்று அந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இது விஷாலின் கவனத்துக்குப்போக மனிதர் கொதித்துப்போய்விட்டார். “என்னை எவ்வளவோ கேவலமாக பேசினார். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் என் படத்தில் வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் அவர் திருந்திய மாதிரியே தெரியவில்லை” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார். அதோடு, இயக்குநர் முத்தையாவை அழைத்து, “நல்லவேளை இன்னமும் அக்ரிமெண்ட் போடவில்லை. அப்படியே விட்டுவிடுங்கள். ராதாரவி வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷாலிடம், “உங்கள் மருது படத்தில் ராதாரவியும் நடிக்கிறாராமே..” என்று கேட்டதற்கு, “அது இன்னும் முடிவாகவில்லை” என்று பட்டென சொல்லிவிட்டார். அதோடு, “ ஒருவேளை நடிக்கும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் சங்கம் என்பது வேறு, நடிப்பு என்பது வேறு. ராதாரவியுடன் மட்டுமல்ல சரத்குமாருடன் கூட இணைந்து நடிப்பேன்” என்று சொல்லி சமாளித்துவிட்டார்.

வந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே இன்று இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறார் ராதாரவி!