060113_alaska_volcano
 
அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான அலாஸ்கா தீபகற்பத்தில் உள்ள எரிமலை (மார்ச் 28 ஆம் தேதி) வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் 20 ஆயிரம் அடி உயரத்துக்கு எங்கும் கரும்புகையும் சாம்பலுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விமானங்கள் பறக்கவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா தீபகற்பத்தில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இவற்றில் மவுண்ட் பாவ்லோப் என்ற எரிமலை மிகவும் தீவிரமானது. இந்த எரிமலை கடந்த ஞாயிறு அன்று மாலை 4 மணி அளவில் கடும் சாம்பல் மற்றும் புகையுடன் தீச்சுவாலைகளை உமிழத் தொடங்கியதாக அங்குள்ள அலாஸ்கா புவியமைப்பியல் ஆய்வு பல்கலைக்கழக விஞ்ஞானி ஜெசிகா லார்சன்கூறினார். “ மவுண்ட் பாவ்லோப் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இவ்வாறு வெடிப்பதுபற்றி வெகுநாட்களுக்கு முன்னதாக கண்டுபிடிப்பது சிரம்ம். ஏனெனில் அதன் தன்மை அவ்வளவு உக்கிரமானது” என்றார் அவர்.
அலாஸ்கா எரிமலை ஆய்வுமையம்  இதுதொடர்பான படங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப்பகுதியில் 20 அடி உயரத்துக்கு சாம்பலும் கரும்புகையும் சூழ்ந்துள்ளதால விமானங்கள் பறக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பிராந்தியம் வழியே பறக்கும் விமானங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்த எரிமலையைச் சுற்றி வாழும் மக்களுக்கு தற்போது உடனடி ஆபத்துகள் ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த எரிமலையிலிருந்து 60 கி.மீ.தொலைவில் கோல்ட் பே எனும் மக்கள் வசிப்பிட நகரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஏப்ரல் முதல் நவம்பர் உள்பட இதுவரை 40 முறை இந்த எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலையில் வெடிப்புச் சம்பவம் நடப்பதும் ஒன்றும் புதிதல்ல. இதுவரை அதிகபட்சமாக சாம்பலும் கரும்புகையும் 49 ஆயிரம் அடி உயரத்துக்கு சூழ்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்புகை பல வாரங்களோ அல்லது சில மாதங்களோ நீடிக்கலாம் என்றும் விஞ்ஞானி ஜெசிகா லார்சன் தெரிவித்துள்ளார்.