சிதம்பரம் கோயில்
சிதம்பரம் கோயில்

ன்று ஆருத்ரா தரிசனம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், ஆருத்ரா தரிசனம் என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்?

பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின்  வாயிலாக உலகை இயங்கச் செய்து, திருநடனம் புரிகின்றார் சிவபெருமான். அவரது அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது.

ஆகவேதான் ‘அவனின்றி அணுவும் அசையாது; சிவனின்றி எதுவும் இசையாது’ என்று நம் முன்னோர்கள் உரைத்தார்கள்.

சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்களை அவர்  தனியாக ஆடினார்  என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்தது, திருவாதிரை திருநாளில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் ஆகும்.

 

சிதம்பரம் நடராஜர்
சிதம்பரம் நடராஜர்

ஆம்… தில்லை என்ற பெயர் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம்.

இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண  கண் கோடி வேண்டும்.

மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுது.

இந்த நேரத்தில் நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு.  ஆகவே இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள் அனைவரும் சிதம்பரம் வருவார்கள் என்பது ஐதீகம்.

‘ஆருத்ரா’ என்றால் ‘நனைக்கப்பட்டது’ என்று பொருள்.

பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும், திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண்பதற்காக தவமிருந்தனர். அவர்களது பக்தியை மெச்சிய சிவபெருமான், தில்லையில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் தனது திருநடன தரிசனம் அளித்த நிகழ்ச்சியே ஆருத்ரா தரிசனம்.

அது என்ன கதை என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா?

ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த திருமால், திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியானது பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது. தன் மீது பாந்தமாக படுத்திருக்கும் பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று நினைத்த  ஆதிசேஷன். மகிழ்ச்சிக்கான காரணத்தை கேட்டார்.

அதற்கு மகாவிஷ்ணு, “சிவபெருமான், நடராஜராக திருவாதிரை திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம்’ என்றார். இதைக் கேட்டதும், திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம் கொண்டார் ஆதிசேஷன். திருமாலும் ஆசி கூறி அனுப்பினார்.

ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.

கயிலைநாதனை நினைத்து அவர் இருந்த தவமானது உச்சநிலையை அடைந்தது. அவர் தன்னை மறந்தார். அப்போது, ‘பதஞ்சலி’ என்று மென்மையான குரல் கேட்டு கண்விழித்தார்.

அங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன் நிற்பதைக் கண்டு பரவசமானார். அவரை  தாழ் பணிந்தார்.

தான் தவம் புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார். சிவனே பேசத் தொடங்கினார், ‘பதஞ்சலியே! உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம் காண வேண்டி, வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும் தவம் செய்து காத்திருக்கிறார்.

எனவே நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்!’ என்று வாக்கு கூறி மறைந்தார்.

பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி தில்லைக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று தனது திருநடன கோல்தை இருவருக்கும், காட்டி அருளினார் சிவபெருமான்.

இந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது விசேஷமாக உள்ளது.

இன்றைய தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க வழி செய்யும்.

  • மகேஷ்வரன்