சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஏற்கனவே முதல்சுற்று கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், காலியாக உள்ள  இடங்களை நிரப்பும் வகையில், 2வது கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி, 2வது சுற்று மருத்துவ படிப்புக்கான  கலந்தாய்விற்கு 20ந் தேதி முதல் 23ந் தேதி வரையில் பதிவு செய்யலாம் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 25 சதவிகித இடங்கள் போக மீதமுள்ள 75 சதவிகித இடங்களில் தமிழ்நாடு அரசு மூலம் கலந்தாய்வு நடத்தி சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி,  தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கக்கூடிய எம்பிபிஎஸ், பி.டி.எஸ்., இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 21ஆம் தேதி  தொடங்கியது.

அதன்படி, மாநிலம் முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,971 இடங்களுக்கும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களுக்கும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 91 இடங்களுக்கும் என 3,992 இடங்களிலும், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 3,302 இடங்களும், 3 தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 433 இடங்களில்  எம்பிபிஎஸ் படிப்பில்   மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

அதுபோல, பல் பருத்துவ படிப்பான,  பிடிஎஸ் படிப்பில் சென்னை புதுக்கோட்டை கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 195 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,790 இடங்களும் நிரப்ப அனுமதிக்கப்பட்டது.

இதற்காக நடைபெற்ற முதல் சுற்று கலந்தாய்வில்,   அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7,568 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,786 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், தெலுங்கு மைனாரிட்டி கல்லூரியில் 7 பிடிஎஸ் இடங்களும், 321 என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடங்கள் எம்பிபிஎஸ் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து,  முதற்கட்ட கலந்தாய்வில்  சேர்க்கை பெற்றவர்கள்,   வேறுக் கல்லூரியில் சேர்வதற்கும், புதியதாக இடங்களை தேர்வு செய்யவும் பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து 14ந் தேதி முதல் 16ந் தேதி வரையில் விரும்பும் கல்லூரி மற்றும் பாடத்தையும் பதிவு செய்யலாம். அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 18ந் தேதி வெளியிடப்பட்டு, 19ந் தேதி இறுதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை  நிரப்பும் வகையில் 2வது சுற்று கலந்தாய்வுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு இன்று (18ந் தேதி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் மறு ஒதுக்கீடு மற்றும் புதிய இடங்களில் ஒதுக்கீடு பெறுவதற்கு செப்டம்பர் 20ந் தேதி முதல் 23 ந் தேதி வரையில் பதிவு செய்யலாம். அதன் அடிப்படையில் 25ந் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். 26ந் தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்கள் அக்டோபர் 5ந் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவித்துள்ளது.

சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் சென்னை மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா ஒரு இடமும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7. 5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பிடிஎஸ் படிப்பில் தமிழ்நாடு பல் மருத்துவக்கல்லூரி, புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 இடங்களும், 15 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 19 இடங்களும் உள்ளது.

அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சென்னை மருத்துவக்கல்லூரி உட்பட 22 கல்லூரிகளில் 75 இடங்களும், கேகே நகர் இஎஸ்ஐஇ கல்லூரியில் 2 இடங்களும், 22 தனியார் மருத்துவக்கல்லூரியில் 268 இடங் களும், 3 தனியார் பல்கலைக் கழகத்தில் 52 இடங்களும், வேலூர் கிருத்துவக் கல்லூரியில் 3 இடங்களும் உள்ளது.

பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 3 அரசு மருத்துவக்கல்லூரியில் 80 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 624 இடங்களும் உள்ளது.

நிர்வாகம் மற்றும் என் ஆர்ஐ லேப்ஸ் இடங்களுக்கான ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 22 தனியார் மருத்துவக் கல்லூரியில் 560 இடங்களும் , 3 தனியார் பல்கலைக் கழகத்தில் 144 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 215 இடங்களும் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது.