சேலம்

சேலம் நகரில் நடைபெறும் வண்டி வேடிக்கை விழாவில் ஏராளமான பெண்கள்கடவுள் வேடம் அணிந்து ஊரவலம் வந்தனர்.

சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இவற்றில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். நேற்று சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.

நேற்று இரவு மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அடுத்து நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வந்தார்.

வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட வண்டிகளில், கடவுள்களைப் போல் வேடம் அணிந்த பெண்களை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். பெண்கள் அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் வேடம் அணிந்து வந்தனர்.

இந்த பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது  இந்நிக்ழ்ச்சியில் திருவிளையாடல், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள்  இடம் பெற்றிருந்தன. இந்த வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்.