சென்னை:  மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  ஞானசேகரனின் கூட்டாளி முரளி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான  தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

“அண்ணா பல்கலை. மாணவி  பாலியல் வழக்கில்  திமுக அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் போனில் பேசிய யார் அந்த சார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  கைதான ஞானசேகரனின் கூட்டாளி பொள்ளாச்சி முரளி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக அனுதாபி ஞானசேகரன் புழல் சிறையில் உள்ளார்.  இவர் ஏற்கனவே சரித்திர பதிவேடு குற்றவாளி என்று கூறப்படுகிறது. இவர் திமுகவுடன் இருந்த நெருக்கம் காரணமாக, இவரை காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில், தொடர் திருட்டு சம்பவங்கள்  மற்றும் அண்ணா பல்லைக்கழக மாணவிகளிடம் பாலியல் சேட்டைகளிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ஞானசேகரன் பல்வேறு திருட்டு மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளிலும் சிக்கியுள்ளனார்.

இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் ஞானசேகரணை காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் ஏழு வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். ஞானசேகரன் கொடுத்த தகவலின் பேரில் ஆலந்தூரை சேர்ந்த நகை வியாபாரி குணால் என்பவரை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்து 120 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.இந்த நிலையில் ஞானசேகரனின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொள்ளாச்சி முரளி என்பவர்,  பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரி. எம்பிஏ முழுமையாக முடீக்காத நிலையில், ) முரளி சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார்.  ஞானசேகரனுக்கும், இவருக்கும் இடையே சிறையில்  ஏற்பட்ட நட்டைத்தொடர்ந்து, முரளியும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு  ஒரு மோசடி வழக்கில் செம்மஞ்சேரி போலீசாரிடம்  சிக்கியுள்ளார்.  மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் ஞானசேகரனுடன் ஒரு கடத்தல் வழக்கிலும் முரளி கைதாகி உள்ளார். பள்ளிக்கரணையில் கடந்த 2022ல் இருவரும் சேர்ந்து இரண்டு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.

பண ஆசை காரணமாக பல்வேறு தொழில்களிலும், திருட்டுகளிலும் ஈடுபட்ட முரளி தற்போது பஸ் கிளீனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்த காவல்துறையினர்,   முரளியிடமிருந்து 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முரளி கொடுத்த தகவலின் பேரில் கிளாம்பாக்கம் பாலத்தின் அடியில் நிறுத்தி இருந்த ஞானசேகரனின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.