டில்லி

ன்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களைப் பெண்கள் பிடித்துள்ளனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வுகள் ஜூன் 5, 2022 அன்று நடைபெற்றது மற்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 1 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 11,35,697 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் 5,73,735 பேர் உண்மையில் தேர்வில் கலந்து கொண்டனர். பிறகு செப்டம்பர் 16 முதல் 25 வரை நடத்தப்பட்ட எழுத்துத் (முதன்மை) தேர்வில் மொத்தம் 13,090 பேர் தகுதி பெற்றனர் மற்றும் முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

பிறகு நடந்த ஆளுமைத் தேர்வில் மொத்தம் 2,529 பேர் தகுதி பெற்றுள்ளனர். மே மாதம் 15 அன்று நேர்காணல் முடிவடைந்தது.  இந்த தேர்வு முடிவுகள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் 933 பேர் – 613 ஆண்கள் மற்றும் 320 பெண்கள் தகுதி பெற்று உள்ளனர். முதல் 25 இடங்களில் 14 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் உள்ளனர்.

இதில் முதல் 4 இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர். தேர்வில் முதல் மூன்று ரேங்க்களை பெண் தேர்வர்கள் பெற்றிருப்பது இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகும்.

அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்  கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஸ்ரா நான்காம் இடமும் பிடித்தனர். லோகியா மற்றும் மிஸ்ரா டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகள், ஹராதி என். ஐஐடி-ஐதராபாத்தில் பி.டெக் பட்டம் பெற்றவர்.