பெங்களூரு

பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் என மரணம் அடைந்துள்ளார்.

பாஜக உறுப்பினரான கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

பெங்களூரு நகரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டுக்கு உதவி கேட்டு சென்றிருந்த போது 17 வயது மகளை வீட்டின் ஒரு அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண்ணின் தாய் புகார் அளித்திருந்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது பதிவான இந்த போக்சோ வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 54 வயது பெண் மூச்சுத்திணறல் காரணமாக உளிமாவு அருகே பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு திடீரென்று உயிர் இழந்தார்.

நுரையீரல் புற்றுநோயால் அந்த பெண் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் ம்தல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர காரணமாக இருந்த பெண் உயிர் இழந்திருப்பது குறித்து சதாசிவ நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.